
இரண்டு பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கி அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் ஒன்பது பேர் புறக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 23ஆம் திகதி புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்ட இரண்டு பலஸ்தீனப் பெண்களைப் பற்றிய விசாரணையின் போது இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் நடந்த அன்று சிவில் உடையில் கடமையில் ஈடுபட்டிருந்த அரச புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவருக்கு சம்பந்தப்பட்ட இரண்டு வெளிநாட்டுப் பெண்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதன்படி, அவர் மற்றொரு பொலிஸ் அதிகாரியின் உதவியுடன் அந்தப் பெண்களிடம் விசாரணை நடத்தியதுடன், மேலதிக உடல் பரிசோதனைக்காக பெண் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரும் வரை அவர்களைத் தடுத்து வைத்திருந்தார்.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த பலஸ்தீனப் பெண்களை விடுவிக்கும் நோக்குடன் சம்பவ இடத்திற்குள் நுழைந்த ஒரு குழுவினர், திடீரென இரண்டு பொலிஸ் அதிகாரிகளையும் கடுமையாகத் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குழப்பமான சூழ்நிலையைப் பயன்படுத்தி இரண்டு வெளிநாட்டுப் பெண்களும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குற்றவியல் பலத்தைப் பயன்படுத்தி பொலிஸ் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒன்பது சந்தேக நபர்களில் இரண்டாம் குறுக்குத் தெருவில் வர்த்தகத்தில் ஈடுபடும் ஏழு பேர், ஒரு குடை உற்பத்தி நிறுவனத்தின் முகாமையாளர் மற்றும் ஒரு சாரதி ஆகியோர் அடங்குவர். இவர்கள் கொழும்பு, வெள்ளவத்தை, கிருளப்பனை மற்றும் சீதுவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் உறுதிப்படுத்தியுள்ளனர்.