
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட 150 மில்லியன் ரூபாய் பெறுமதியான பாரிய சொத்துக்களை தடை செய்ய இலங்கை பொலிஸின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. மொரட்டுவ, சொய்சாபுர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக சொத்துக்களையும், செல்வத்தையும் சம்பாதித்துள்ளதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணைகளின் பின்னர், விசாரணை அதிகாரிகள் 46 வயதுடைய சந்தேகநபரை 2026 மார்ச் மாதம் 25 ஆம் திகதி ஹொரேதுடுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்தனர்.
சந்தேகநபரைக் கைது செய்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், இந்தச் சொத்துக்கள் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்ட பணத்தில் முழுமையாக வாங்கப்பட்டவை என்பது மேலும் தெரியவந்துள்ளது. அதன்படி, பாணந்துறை கெசல்வத்தை பிரதேசத்தில் 11 பேர்ச் காணியில் கட்டப்பட்டுள்ள 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடும், மொரட்டுவ பிரதேசத்தில் 16 பேர்ச் காணியில் அமைந்துள்ள 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று மாடி வீடும் இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளன. 2006 ஆம் ஆண்டு இலக்கம் 05 பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் 07 நாட்களுக்கு குறித்த சொத்துக்களை செயலிழக்கச் செய்ய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 2026 மார்ச் மாதம் 26 ஆம் திகதி மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.