அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு எதிராக பாகிஸ்தான் முழுவதும் பாரிய போராட்டங்கள் வெடித்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் நடைபெற்ற ஈரான் ஆதரவு போராட்டத்தின் போது குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
கராச்சி நகரின் மை கொலாச்சி சாலையில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் பலவந்தமாக நுழைய முயன்றனர், அவர்களை கலைக்க பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் மேலும் பலருக்கு காயங்கள் ஏற்பட்டன. கராச்சி சிவில் மருத்துவமனைக்கு ஒன்பது சடலங்கள் கொண்டு வரப்பட்டதாக பொலிஸ் அறுவை சிகிச்சை நிபுணர் சும்மயா சயீத் அல் ஜசீரா செய்தி சேவைக்கு உறுதிப்படுத்தினார். மேலும், காயமடைந்தவர்கள் மற்றவர்களால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதையும், போராட்டக்காரர்கள் தூதரக கட்டிடத்திற்குள் நுழைய முயற்சிப்பதையும் காட்டும் உறுதிப்படுத்தப்பட்ட வீடியோ காட்சிகள் இணையம் முழுவதும் பரவி வருகின்றன.
இந்த அமைதியின்மை கராச்சி நகருடன் மட்டும் நின்றுவிடவில்லை, பாகிஸ்தானின் மேலும் பல பகுதிகளில் பாரிய போராட்டங்கள் பரவியுள்ளன. சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான வட பாகிஸ்தானின் ஷியா பெரும்பான்மை வசிக்கும் கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்தின் ஸ்கார்டு நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகக் கட்டிடத்திற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். ஒரு பெரிய கூட்டம் கூடி இந்த கட்டிடத்தை முழுவதுமாக எரித்ததாகவும், ஆனால் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என்றும் மாகாண அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஷபீர் மிர் ரொய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
இதற்கிடையில், மத்திய லாகூர் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கூடியிருந்தனர். தூதரகத்திலிருந்து நூற்றுக்கணக்கான கெஜம் தொலைவில் உள்ள பாதுகாப்பு வாயிலுக்கு சேதம் விளைவிக்க சில போராட்டக்காரர்கள் முயன்றாலும், எந்தவித பலப்பிரயோகமும் இன்றி அவர்களை அமைதியாக தடுத்து நிறுத்த பொலிஸார் வெற்றி பெற்றதாக நேரில் கண்ட சாட்சியான அகீல் ராசா தெரிவித்தார். இதன் காரணமாக லாகூர் நகரில் இதுவரை எந்த வன்முறைச் சம்பவங்களும் பதிவாகவில்லை.