
ஒரு பெண்ணுக்குச் சொந்தமான மோட்டார் வாகனத்தின் எரிபொருள் பெறுவதற்காகப் பயன்படுத்தப்படும் QR குறியீட்டின் இரகசியத் தகவல்களை மோசடியாகப் பெற்றுப் பயன்படுத்திய ஒருவர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (25) நிட்டம்புவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பிலியந்தலை பிரதேசத்தில் வசிக்கும் முப்பது வயதுடைய ஒருவராவார்.பொலிஸ் விசாரணைகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டதன் படி, இந்த சந்தேகநபர் இதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட முறைப்பாட்டாளரான பெண்ணின் சாரதியாகப் பணியாற்றியவர். அத்துடன், அவர் இந்த புதிய மோட்டார் வாகனத்தை வாங்கும் போது அதைச் சரிபார்த்துத் தேர்ந்தெடுப்பதற்கும் தனது உதவியை வழங்கியுள்ளார்.
சம்பந்தப்பட்ட பெண் தனது புதிய மோட்டார் வாகனத்திற்கான எரிபொருள் ஒதுக்கீட்டைப் பெறும் நோக்குடன் QR குறியீட்டைச் செயற்படுத்த முயன்ற போதே இந்த குற்றம் வெளிச்சத்துக்கு வந்தது. அதைச் செயற்படுத்த முடியாமல் போனதால் அவர் 1919 என்ற குறுஞ்செய்தி இலக்கத்திற்கு இது குறித்து முறைப்பாடு செய்துள்ளார். பின்னர் டிஜிட்டல் அமைச்சு அந்த முறைப்பாட்டை மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அனுப்பியுள்ளது.
அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்னவென்றால், சந்தேகநபர் சம்பந்தப்பட்ட மோட்டார் வாகனத்தின் சேசிஸ் இலக்கம் உள்ளிட்ட தகவல்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி போலியான குறியீடு ஒன்றை உருவாக்கியுள்ளார். அவர் தொழில் ரீதியாக ஒரு வாடகை கார் சாரதி ஆவார். தனது வாடகை காரின் ஓட்ட நடவடிக்கைகளுக்குத் தேவையான எரிபொருளைப் பெறுவதற்காக இந்த போலியான குறியீட்டைப் பயன்படுத்தி பிலியந்தலை பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து எரிபொருள் பெற்றுள்ளார் என்பதையும் பொலிஸார் மேலும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
குற்றப் புலனாய்வு மற்றும் நிதி குற்றப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சந்திமா அருமப்பெரும அம்மையாரின் வழிகாட்டலின் கீழ் இந்த விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கருணாரத்ன, பொலிஸ் பரிசோதகர் காயஸ்ரீ மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் வினோத் குமார ஆகிய அதிகாரிகள் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.