
ஒரு தனி நபரின் அதிகார வெறி, சுயநலம் மற்றும் முழு உலகையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற தீவிர ஆசை காரணமாக, இன்று உலக அமைதி முழுமையாக சீர்குலைந்து, முழு மனிதகுலமும் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளது என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். கடந்த (04) ஆம் திகதி நள்ளிரவில் கொழும்பு கொட்டாஞ்சேனை புனித லூசியா பேராலயத்தில் நடைபெற்ற பிரதான ஈஸ்டர் ஆராதனையில் கலந்துகொண்டபோது அவர் இதைத் தெரிவித்தார்.
உலக அமைதிக்காக அனைவரும் ஒன்றிணைந்து பிரார்த்திக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டிய கர்தினால், சம்பந்தப்பட்ட நபரின் எண்ணங்கள் மாறி, இந்த அழிவுகரமான மற்றும் பலவீனமான பாதையிலிருந்து அவரை விடுவிக்க கடவுளை வேண்டுமாறு பக்தர்களிடம் கேட்டுக்கொண்டார். ஒரு மனிதனின் தன்னிச்சையான செயல் உலக மக்களுக்கு எவ்வளவு தீவிரமான சோகத்தை உருவாக்கியுள்ளது என்பதை அவர் மேலும் அங்கு வலியுறுத்தினார்.
உண்மையாகவே கிறிஸ்தவ மதத்தை நம்பினால் யாரும் இப்படிச் செயல்பட முடியாது என்று சுட்டிக்காட்டிய பேராயர், கிறிஸ்தவம் என்பது வெறும் ஜெபிப்பது, பைபிள் வாசிப்பது அல்லது குருமார்களைச் சூழ்ந்துகொண்டு உலகிற்கு தனது நீதியைக் காட்டுவது அல்ல என்றும் விளக்கினார். உண்மையான கிறிஸ்தவம் என்பது அன்பை உயிர்ப்பிப்பதும், அண்டை வீட்டாரிடமும் கடவுளிடமும் தூய்மையாக இருப்பதும் ஆகும் என்று சுட்டிக்காட்டிய அவர், ஒரு உண்மையான தலைவர் எப்போதும் மக்களின் ஊழியராக இருக்க வேண்டும் என்று நினைவுபடுத்தினார். ஆனால் தற்போதைய உலக ஆட்சியாளர்கள் மக்கள் ஊழியர்களாக மாறாமல், வெறும் அதிகாரத்தின் பின்னால் மட்டுமே ஓடும் தலைவர்களாக மாறியுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.