சீதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூக்கலன்கமுவ பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டிலிருந்து அசாதாரண துர்நாற்றம் வீசுவதாக நேற்று (20) மாலை சீதுவ பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் உடனடியாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று குறித்த வீட்டை சோதனையிட்டபோது, ஒரு படுக்கையறையில் இருந்த பயணப் பைக்குள் மிக சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணின் சடலத்தை கண்டுபிடிக்க முடிந்தது.
இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்தவர் மூக்கலன்கமுவ, சீதுவ பிரதேசத்திலேயே வசித்து வந்த 79 வயதுடைய வயோதிபப் பெண் ஆவார். ஆரம்பகட்ட விசாரணைகளில், அவர் நீண்டகாலமாக அந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த மரணம் தொடர்பான ஆரம்பகட்ட அவதானிப்புகளின்போது, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) பாதுகாப்பு கமரா அமைப்பு அகற்றப்பட்டிருந்ததும், வீட்டின் தொலைபேசி கம்பிகள் துண்டிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளதால், இது ஒரு திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை இன்று (21) நடைபெறவுள்ளது. இந்த கொடூரக் குற்றத்தைச் செய்த கொடூரர்கள் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், சந்தேக நபர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்வதற்காக சீதுவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் விரிவான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







