ஈசி கேஷ் முறையைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியினர், சட்டவிரோத சொத்து விசாரணைக் பிரிவின் அதிகாரிகளால் 2026 மே 20 அன்று அத்துருகிரிய ஒறுகொட பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் பின்னர் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பெண் 32 வயதுடையவர், சந்தேகநபரான ஆண் 37 வயதுடையவர். பொரளை, பேஸ்லைன் மாவத்தையில் அமைந்துள்ள சிரிசர உயன முகவரியில் வசிக்கும் இந்தத் தம்பதியினர் 2017 ஆம் ஆண்டு முதல் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்தக் கடத்தல் மூலம் சம்பாதித்ததாகச் சந்தேகிக்கப்படும் பணம் சந்தேகநபரான பெண்ணின் தாயின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி அத்துருகிரிய, ஒறுவல சாந்த லோகாகம, கொறதொட்ட பிரதேசத்தில் 08 ஆம் ஒழுங்கையில் 6 பேர்ச்சஸ் காணி மற்றும் வீட்டை சந்தேகநபரான பெண் வாங்கியுள்ளார். 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சுமார் 300 இலட்சம் ரூபா செலுத்தி இந்தச் சொத்து வாங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, பணமோசடி தடுப்புச் சட்டத்திற்கு இணங்க, சம்பந்தப்பட்ட வீடும் காணியும் 2026 மே 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 07 நாட்களுக்கு முடக்குவதற்கான உத்தரவு பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் 06 வங்கிக் கணக்குகள் தொடர்பாகவும் சட்டவிரோத சொத்து விசாரணைக் பிரிவு தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தக் கணக்குகள் சந்தேகநபர், சந்தேகநபரான பெண் மற்றும் அவரது தாயின் பெயர்களில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளன. மேலும், சந்தேகநபரின் பெயரில் வாங்கப்பட்டுள்ள ஆடம்பர மோட்டார் கார் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.