
அக்குரஸ்ஸ பிரதேசத்தில் நடத்தப்பட்டு வந்த சூதாட்ட விடுதியை சுற்றிவளைக்கவுள்ளதாக முன்கூட்டியே தகவல் வழங்கிய சம்பவம் தொடர்பில் மாத்தறை கோட்ட புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை பணி இடைநிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி அக்குரஸ்ஸ பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று சூதாட்ட விடுதி நடத்தப்பட்ட வீட்டை சுற்றிவளைப்பதற்காக புறப்பட்டுச் சென்றுள்ளது. அப்போது அக்குரஸ்ஸ பொலிஸில் கடமையாற்றிய சந்தேகநபரான புலனாய்வுப் பிரிவு சார்ஜன்ட், சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளருக்கு தனது கையடக்கத் தொலைபேசியில் அழைப்பு விடுத்து பொலிஸ் சுற்றிவளைப்பு குறித்து முன்கூட்டியே அறிவித்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர், சூதாட்ட விடுதியை நடத்திய நபர் மற்றும் பொலிஸ் நிலையத்தின் தொலைபேசி தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. அந்த விசாரணையில் பெறப்பட்ட தொலைபேசி அறிக்கைகள் மூலம், சந்தேகநபரான உத்தியோகத்தர் உண்மையில் சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளருக்கு பொலிஸ் வருவதாக தகவல் வழங்கியுள்ளார் என்பது உறுதியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, தனது கடமையை உரிய முறையில் செய்யாமை, திணைக்களத்தின் நம்பிக்கையை மீறியமை மற்றும் பொலிஸ் சேவையின் கௌரவத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டமை ஆகிய பாரதூரமான குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த உத்தியோகத்தரின் சேவையை இடைநிறுத்த மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.