அனுராதபுரத்தில் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா மற்றும் குழுவினரை இலக்கு வைத்து 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட ஒருவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தனக்கு விதிக்கப்பட்ட இந்த தண்டனை மற்றும் குற்றவாளி தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் தள்ளுபடி செய்யுமாறு கோரி பிரதிவாதி உமர் ஹத்தாப் தாக்கல் செய்த சிறப்பு மேன்முறையீட்டை நிராகரித்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
சிரான் குணரத்ன மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோரைக் கொண்ட இருவர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்தத் தீர்ப்பை அறிவித்தது.
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அலுவலகம் திறப்பு விழாவின் போது, 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதி அனுராதபுரத்தில் இந்த கொடூரமான தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த துயர சம்பவத்தில் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா, அவரது மனைவி மற்றும் மேலும் பலரும் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபர் பல சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். விசாரணையின் முடிவில், அனுராதபுரம் மேல் நீதிமன்றம் பிரதிவாதி உமர் ஹத்தாப்பை குற்றவாளியாகக் கண்டறிந்து ஆயுள் தண்டனை விதித்தது. பின்னர், அந்த மேல் நீதிமன்றத் தீர்ப்பு சரியானது என்று மேன்முறையீட்டு நீதிமன்றமும் உறுதிப்படுத்தியது. அதன் பின்னரே பிரதிவாதி நிவாரணம் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தார்.
எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட சிறப்பு மேன்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதை முழுமையாக நிராகரிக்க நடவடிக்கை எடுத்தது. அதன்படி, மேல் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்புகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.