சமூக ஊடகங்களில் அண்மைய நாட்களில் பரவிய காணொளியில் சித்தரிக்கப்பட்டபடி, மாளபே நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொசன் அன்னதான நிலையத்திற்கு அருகில் இளைஞர் ஒருவர் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து இளம் சந்தேக நபர்களை மாளபே பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 16 மற்றும் 17 வயதுக்குட்பட்ட இவர்கள் கொத்தலாவல பிரதேசத்தின் பட்டியவத்த வீதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
அன்னதான வரிசையில் காத்திருந்தது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதாலேயே இந்த கொடூரத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.பொலிஸ் விசாரணைகளின்படி, அன்னதான வரிசையில் காத்திருந்த குறித்த இளைஞர், வரிசையை உடைத்துக்கொண்டு தனக்கு முன்னால் நுழைய முயன்ற இருவரிடம் வரிசையின் பின்னால் செல்லுமாறு கூறியுள்ளார். இந்த அறிவிப்பால் கோபமடைந்த ஒரு குழு, பாதுகாப்பு தலைக்கவசங்களாலும், கைகளாலும், கால்களாலும் குறித்த இளைஞரை கொடூரமாகத் தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதல் இடம்பெறும் காட்சிகளைக் கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டதுடன், சமூகத்தில் பெரும் விவாதத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
சமூக ஊடகங்களில் பரவிய இந்த காணொளி மற்றும் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மாளபே பொலிஸார் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்தனர். அதன்படி, விரிவான தேடுதல்களுக்குப் பின்னர் இந்த ஐந்து சந்தேக நபர்களையும் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்ய முடிந்தது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (1) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய ஏனைய நபர்களையும் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மாளபே பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.