கம்பஹா பமுனுகம, எப்பாமுல்ல கடற்கரையில் குளிக்கச் சென்று நேற்று (30) மாலை நீரில் மூழ்கி காணாமல் போனவர்களில் மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு மீட்கப்பட்ட சடலங்கள் 35 வயதுடைய பெண் ஒருவரினதும், 04 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுமிகளினதும் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த விபத்தில் காணாமல் போன 13 வயது சிறுவனை தேடும் பணிகள் மற்றும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நீரில் மூழ்கிய இந்த குழுவினர் ஜா-எல பிரதேசவாசிகள் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காணாமல் போன மற்ற குழந்தையை தேடும் பணியில் கடற்படையின் உதவியுடன் பிரதேசவாசிகளும் பொலிஸாரும் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.