
22வது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதித்துறை அமைப்புச் சட்டத் திருத்தம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிப்பதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று வரவிருந்த சந்திப்பை மையமாக வைத்து நாடாளுமன்றத்தில் சூடான விவாதம் ஒன்று எழுந்துள்ளது. ஆகஸ்ட் 20ஆம் திகதி பிற்பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ள இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்றத்தின் 225 பிரதிநிதிகளும் கலந்துகொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்ததுடன், இந்த விளக்கமளிப்பு தனது கோரிக்கையின் பேரிலேயே நடைபெறுவதாக ஆகஸ்ட் 19ஆம் திகதி அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், குறித்த சந்திப்பை ஏற்பாடு செய்வதில் நடைமுறைச் சிக்கல் (Procedural Error) இருப்பதாக சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். இவ்வாறான சந்திப்பைக் கூட்ட எதிர்க்கட்சித் தலைவருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்றும், இது குறித்து கட்சித் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் சபை முதல்வர் தெரிவித்தார். மேலும், இந்த சந்திப்பை செய்தி வெளியிட்டமைக்காக ஊடகங்கள் மீதும் அவர் தனது கண்டனத்தை தெரிவித்தார்.
அந்த அறிக்கைக்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் நடைபெறும் இந்த கலந்துரையாடல் குறித்து கடந்த ஜூலை 31ஆம் திகதியே சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு தான் அறிவித்ததாகக் குறிப்பிட்டார். மேலும், இந்த சந்திப்பில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்வதற்கு தேவையான வசதிகளை செய்து தருமாறும் சபாநாயகரிடம் தான் கோரியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.