
ஒரு கையடக்கத் தொலைபேசியை பணத்திற்கு அடகு வைத்த சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு முற்றியதால், வன்னி பளுகொல்லாவ பிரதான வீதியில் கூர்மையான கத்தியால் குத்தி இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 12ஆம் திகதி இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் வன்னி பளுகொல்லாவ, கம்பிரிகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய பியசிறி லக்கிந்து லக்ஷான் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
அடகு வைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசியை மீட்கச் சென்றபோது உயிரிழந்த இளைஞருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம், இருவரும் கூர்மையான கத்திகளால் ஒருவரையொருவர் குத்திக்கொண்டதில் முடிவடைந்துள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த லக்கிந்து லக்ஷான் உடனடியாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்தக் கொலையுடன் தொடர்புடைய அதே பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய பிரதான சந்தேகநபரையும், தாக்குதலுக்கு கத்தியை வழங்கியதாகக் கூறப்படும் 29 வயதுடைய சந்தேகநபரையும் பரசங்கஸ்வெவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் நேற்று (13) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பில் பரசங்கஸ்வெவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம். அன்வர்தீன் அவர்களின் வழிகாட்டலில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.