நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு 2019 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், அவர் தற்போது கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆறு வருட சிறைத்தண்டனையின் எஞ்சிய பகுதியை அனுபவிப்பதற்காக அவரை மீண்டும் சிறையில் அடைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் நோக்கில் சிறைச்சாலை அதிகாரிகள் ராஜகிரிய, நாவலவில் உள்ள அவர் தங்கியிருந்த விகாரைக்கு சென்றுள்ளனர்.
இருப்பினும், ஞானசார தேரர் தற்போது இருக்கும் இடம் குறித்து தங்களுக்குத் தெரியாது என்று அங்கு தங்கியிருந்த மற்ற பிக்குகள் அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளனர்.ஞானசார தேரர் பொலிஸில் சரணடையும் வரை அல்லது பொலிஸாரால் கைது செய்யப்படும் வரை சிறைச்சாலை அதிகாரிகளால் மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஞானசார தேரர் ஒருபோதும் நாட்டில் இனவாத மோதல்களை உருவாக்க முயற்சிக்கவில்லை என்று பொது பல சேனா அமைப்பின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பொறுப்பான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவராக சஹ்ரான் ஹாஷிம் அடையாளம் காணப்பட்ட பின்னர் நாட்டில் நிலவிய இனவாத அமைதியின்மைகள் குறைந்ததாகவும் அந்த அதிகாரி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
2019 மே மாதம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் குறித்த ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் ஞானசார தேரர் சுமார் ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்திருந்தார். இந்த மன்னிப்பு வழங்கும் முடிவு தன்னிச்சையானது என்றும், இது பொதுமக்களின் நம்பிக்கையையும், இயற்கை நீதியின் கோட்பாடுகளையும் மீறியுள்ளது என்றும் மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. அதன்படி, உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய, சம்பந்தப்பட்ட சட்ட மற்றும் சிறைச்சாலை நடைமுறைகளுக்கு ஏற்ப, அவருக்கு விதிக்கப்பட்ட ஆறு வருட சிறைத்தண்டனையின் எஞ்சிய பெரும்பகுதியை எதிர்காலத்தில் சிறையில் கழிக்க நேரிடும்.
நாட்டில் தேசிய நல்லிணக்கம் மற்றும் வெறுப்புப் பேச்சு குறித்த உரையாடல் மீண்டும் எழுந்துள்ள பின்னணியில் இந்த புதிய சட்ட நிலைமை உருவாகியுள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்பின் பிரதிநிதிகள் அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தபோது, கடந்த இரண்டு ஆண்டுகளில் தேசிய நல்லிணக்கத்தைப் பேணுவதில் அரசாங்கத்திற்கு தமது பாராட்டைத் தெரிவித்ததோடு, சமூக ஊடகங்களில் பரவும் வெறுப்புப் பேச்சுக்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரினர்.