பண்டாரவளை மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பண மோசடி மற்றும் போலி ஆவணங்கள் தயாரிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைகளின்படி, அந்த மாநகர சபையின் முன்னாள் மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க பண்டாரவளை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (09) இரவு இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சில மாதங்களுக்கு முன்னர் மாநகர சபையின் இரண்டு வருவாய் ஆய்வாளர்களும் பல எழுதுவினைஞர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் ஏனைய விசாரணைகள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் முன்னாள் மேயர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது பண்டாரவளை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்யப்பட்ட முன்னாள் மேயரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர் இன்று (10) பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.