
அடுத்த காலாண்டிற்கான மின்சார கட்டணத்தை திருத்தி விலையை அதிகரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இன்று (11) பாராளுமன்ற அமர்வின் போது விசேட கருத்து தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்க எரிசக்தி அமைச்சு எந்த கோரிக்கையையும் முன்வைக்க எதிர்பார்க்கவில்லை என சுட்டிக்காட்டினார்.
கடந்த காலத்தில் தீவுக்கு கிடைத்த அதிக மழை காரணமாக மின் உற்பத்திக்கு செலவாகும் மொத்த செலவை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடிந்தது என அமைச்சர் விளக்கமளித்தார். எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக மழைப்பொழிவு கிடைத்ததால் செலவுகளை நிர்வகிக்க முடிந்தது என்றும், எனவே எதிர்வரும் காலத்தில் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் எழவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், எதிர்வரும் புத்தாண்டின் முதல் 3 மாதங்களுக்கு நாட்டில் தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதிப்படுத்த தேவையான அனைத்து முறையான நடவடிக்கைகளையும் எரிசக்தி அமைச்சு ஏற்கனவே எடுத்துள்ளது என்பதையும் அமைச்சர் மேலும் உறுதிப்படுத்தினார்.