நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள உடற்பயிற்சி நிலையம் ஒன்றின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் காரில் இருந்த திருமணமான பெண் ஒருவரின் காரில் பலவந்தமாக ஏறியதாகக் கூறப்படும் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக நாரஹேன்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 17ஆம் திகதி இந்த சம்பவம் பதிவாகியுள்ளதுடன், முறைப்பாடு செய்த பெண் கொழும்புக்கு அருகிலுள்ள பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் நிறைவேற்று அதிகாரி தரத்தில் தொழில் புரியும் ஒருவராவார்.அவர் உடற்பயிற்சி நிலையத்திற்கு வந்து தனது மோட்டார் காரின் சாரதி ஆசனத்தில் அமர்ந்திருந்த சந்தர்ப்பத்தில், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கு வந்து காரின் கண்ணாடியைத் தட்டி அவளுடன் பேச விரும்புவதாகக் கூறியுள்ளார்.
தனக்கு நாடாளுமன்ற உறுப்பினருடன் பேச எந்த அவசியமும் இல்லை என்றும், தொந்தரவு செய்யாமல் வெளியேறுமாறும் அவர் கோரிய போதிலும், அதைப் பொருட்படுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர் காரின் கதவைத் திறந்து பலவந்தமாக உள்ளே அமர்ந்துள்ளார். இந்த எதிர்பாராத சம்பவம் காரணமாக தான் பெரும் அதிர்ச்சிக்குள்ளானதாக குறித்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். "ஏன் என்னுடன் பேச மறுக்கிறீர்கள்?" என்று நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டபோது, தொந்தரவு செய்யாமல் காரில் இருந்து இறங்குமாறு அவர் மீண்டும் கோரியுள்ளார். அவரது கடுமையான கோரிக்கையை அடுத்து, இறுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் காரில் இருந்து இறங்கிச் சென்றுள்ளார்.
தனது குழந்தையும் நாடாளுமன்ற உறுப்பினரின் குழந்தைகளும் ஒரே பாடசாலையில் கல்வி கற்பதால் அவரைத் தெரியும் என முறைப்பாட்டாளர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் அவரது கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்புகள் விடுத்துள்ளதாகவும், அந்த எண்களை அவர் தடை செய்துள்ளதாகவும், பின்னர் வேறு எண்களில் இருந்து அழைப்புகள் வந்தபோது அவற்றையும் தடை செய்ததாகவும் அவர் பொலிஸாரிடம் வெளிப்படுத்தியுள்ளார். இனிமேல் தனக்கு இவ்வாறான தொந்தரவுகள் அல்லது அசௌகரியங்கள் ஏற்படாதவாறு குறித்த நாடாளுமன்ற உறுப்பினரை அழைத்து கடுமையாக எச்சரிக்குமாறு அவர் பொலிஸாரிடம் கோரியுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நாரஹேன்பிட்டி பொலிஸார், முறைப்பாட்டை விசாரிப்பதற்காக குறித்த நாடாளுமன்ற உறுப்பினரையும் முறைப்பாட்டாளரான பெண்ணையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.