
சட்டமா அதிபரின் செயற்பாடுகளுக்கு எதிராக சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்று (21) காலை 10.00 மணிக்கு கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் ஆரம்பமானது.
சட்டமா அதிபர் திணைக்களத்திற்குள் இடம்பெறுவதாகக் கூறப்படும் ஊழல்களை மறைப்பதற்கும், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தாமல் அவர்களைப் பாதுகாப்பதற்கும் சட்டமா அதிபர் செயற்படுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இவ்வாறானதொரு எதிர்ப்பு இதற்கு முன்னரும் ஒரு உள் கடிதம் கசிந்த பின்னரே ஏற்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பான விசாரணைகளில் சட்டமா அதிபர் பக்கச்சார்பாக செயற்பட்டமை, மகர சிறைச்சாலை சம்பவம், மகேஷ் இந்திக கொலை மற்றும் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் சந்தேகநபர்களை விடுவிக்க எடுத்த தீர்மானம் போன்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர, பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக உள்ள வழக்கில் குற்றச்சாட்டுகளை விலக்கிக் கொள்ள சட்டமா அதிபர் திணைக்களம் மேற்கொண்ட முயற்சி திருகோணமலை நீதவான் நீதிமன்றில் நேற்று தோல்வியடைந்தமையும் ஆர்ப்பாட்டக்காரர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இணையாக, சட்டமா அதிபரின் மற்றும் திணைக்களத்தின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி 'ஃப்ரீ லோயர்ஸ்' (Free Lawyers) அமைப்பினால் இன்று பிற்பகல் 1.45 மணிக்கு சட்டமா அதிபர் அலுவலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, சமூக ஊடகங்கள் ஊடாக சட்டமா அதிபரை இலக்கு வைத்து முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து கவலை தெரிவித்து அறிக்கை வெளியிட்ட இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், சட்டமா அதிபரின் பணி அரை நீதிமன்றத் தன்மையைக் கொண்டது என வலியுறுத்தியுள்ளது.
சட்டமா அதிபர், விசாரணை அதிகாரிகளால் முன்வைக்கப்படும் சாட்சியங்களின் சட்டபூர்வமான செல்லுபடியின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்க வேண்டுமே தவிர, பொது மக்களின் கருத்துக்கள் அல்லது உணர்வுகளின் அடிப்படையில் அல்ல என்றும், ஒரு முடிவு அநியாயமானது என்று தோன்றினால், அதற்கு எதிராக ரிட் ஆணை அல்லது அடிப்படை உரிமை மனு மூலம் நீதிமன்ற நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.
அரசு அதிகாரிகள் சுதந்திரமாகச் செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறும் சட்டத்தரணிகள் சங்கம், அரசியல் அல்லது குறுகிய நோக்கங்களுக்காக அரசு நிறுவனங்களின் சுதந்திரத்தைப் பலியிட வேண்டாம் என்று அரசாங்கத்தையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களையும் கேட்டுக்கொள்கிறது.
எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கத்தினால் சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்கவுக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டு வருவது குறித்து இதுவரை எந்தவொரு கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தினார்.