அரசாங்க நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் முஸ்லிம் அரச ஊழியர்களுக்காக வரவிருக்கும் ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு விசேட சலுகைத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, ரமழான் நோன்பு நோற்கும் முஸ்லிம் அரச உத்தியோகத்தர்கள் தமது மத அனுஷ்டானங்களில் ஈடுபடுவதற்கு வசதியாக நெகிழ்வான சேவை நேர அட்டவணையை அமுல்படுத்துமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இந்த அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை அமைச்சு செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் அத்துடன் அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டரீதியான சபைகளின் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இம்முறை ரமழான் நோன்பு காலம் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 21 ஆம் திகதி வரை உள்ளதாக குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இக்காலப்பகுதியில் முஸ்லிம் ஊழியர்கள் தமது மதக் கடமைகளை நிறைவேற்றக் கூடிய வகையில் கடமை அட்டவணைகளைத் தயாரிக்குமாறு நிறுவனத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இக்காலப்பகுதியில் அத்தியாவசியமான மற்றும் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மாத்திரமே விசேட விடுமுறைகள் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது. அதற்குப் பதிலாக, சேவை அட்டவணைகளை சரிசெய்வதன் மூலம் கடமைகளை ஈடுசெய்யவும், ஊழியர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்கவும் முன்னுரிமை அளிக்குமாறு குறித்த சுற்றறிக்கை மூலம் மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.