இன்று (18) நண்பகல் பேலியகொட, மீகஹவத்த பிரதேசத்தில் புறாக்கள் தொடர்பில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட தகராறு முற்றியதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதுடன், குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதே உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். உயிரிழந்தவர் 38 வயதுடைய வத்தளை, ஒலியமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
இதேவேளை, தாக்குதல் நடத்திய சந்தேகநபரும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் அங்கு தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.