KDK என்ற ஜப்பானிய வர்த்தக நாமத்தில் போலியாக தயாரிக்கப்பட்ட மின்விசிறிகளை விற்பனை செய்த மோசடி தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபை விசாரணையை ஆரம்பித்துள்ளது. இதன்படி, பிலியந்தலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த வர்த்தக நிலையத்திலிருந்து மீட்கப்பட்ட மின்விசிறிகளுக்கு சரியான இறக்குமதியாளர் அல்லது உற்பத்தியாளர் குறித்த தகவல்களைக் கூட வெளிப்படுத்த முடியவில்லை என்று அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர், கெஸ்பேவ நீதவான் நீதிமன்றம் குறித்த வர்த்தகருக்கு 40,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மேலும், வழக்கு பொருட்களாக சமர்ப்பிக்கப்பட்ட 20 மின்விசிறிகளை பறிமுதல் செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறான மோசடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, ஒரு பொருளை வாங்கும் போது, பொருளின் லேபிள் மற்றும் எழுத்துக்கள், உற்பத்தியாளர் அல்லது இறக்குமதியாளரின் பெயர் மற்றும் முகவரி, அதிகபட்ச சில்லறை விலை, நிறுவன உத்தரவாத அட்டை (Company Warranty Card) மற்றும் பணம் செலுத்திய பிறகு சரியான பற்றுச்சீட்டைப் பெறுவது நுகர்வோரின் உரிமை என்று நுகர்வோர் விவகார அதிகார சபை வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறான தவறான வழிகாட்டும் நடவடிக்கைகளில் இருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக, நாடு முழுவதும் இவ்வாறான சுற்றிவளைப்புகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என்றும் அதிகார சபை மேலும் தெரிவித்தது.