ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன மற்றும் சஜித் ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது. இந்தியாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்திடம் இருந்து கிடைத்த அழைப்பின் பேரில் ஜனவரி 26 ஆம் திகதி நடைபெறும் இந்திய குடியரசு தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த பிரதிநிதிகள் குழுவில் சஜித் ஜன பலவேகயவை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களான சித்ரால் பெர்னாண்டோ, சமிந்திராணி கிரிஎல்ல, சதுர கலப்பதி மற்றும் பிரசாத் சிறிவர்தன ஆகியோர் அடங்குவர். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான இந்திக அநுருத்த, சஞ்சீவ எதிரிமான்ன, சம்பத் அத்துக்கோரல மற்றும் அரசியல் சபை உறுப்பினர் மிலிந்த ராஜபக்ஷ ஆகியோரும் இணைந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் மற்றொரு முக்கிய அம்சமாக, உலகின் முன்னணி அனர்த்த முகாமைத்துவ நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட ஒடிசா அனர்த்த முகாமைத்துவ மையத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொள்ளவும் இந்த குழு எதிர்பார்க்கிறது. அத்துடன், அசோகப் பேரரசரின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த பழமையான பௌத்த தொல்பொருள் தளங்களைப் பார்வையிடவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த விஜயம் தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல் அண்மையில் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் சம்பந்தப்பட்ட இலங்கை தூதுக்குழுவினரிடையே மிகவும் சுமுகமான சந்திப்பு இடம்பெற்றதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.