ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெதகொட தல்டுவ பிரதேசத்தில் இன்று (08) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். தல்டுவ - அமிதிரிகல வீதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் தெரிவித்ததன்படி, அமிதிரிகலவில் இருந்து தல்டுவ நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் ஒன்றும், அதற்கு எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த நேருக்கு நேர் மோதலின் பின்னர் கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து இடம்பெற்றபோது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஓட்டுநரும் பின்னால் அமர்ந்திருந்தவரும், அத்துடன் காரில் பயணித்த மூவரும் படுகாயமடைந்தனர். உடனடியாக செயற்பட்ட பிரதேசவாசிகளும் பொலிஸாரும் காயமடைந்த ஐவரையும் அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.