துபாய் நாட்டிலிருந்து இங்கு போதைப்பொருள் வலையமைப்பை இயக்கி வரும் "ரந்தில்" என்பவருக்குச் சொந்தமான சுமார் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் தொகையுடன் ஒரு தாய்லாந்து நாட்டவரையும் ஒரு உள்ளூர் கடத்தல்காரரையும் கைது செய்ய களனிப் பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகம் வெற்றி பெற்றுள்ளது.
கிரிபத்கொட பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு இருமாடி வீட்டை ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் மாத வாடகை அடிப்படையில் பெற்று அங்கு தங்கியிருந்த பிரதான சந்தேகநபர் தம்புத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவர் என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த வீட்டை சுற்றிவளைத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேகநபரிடமிருந்து 3 கிலோ 18 கிராம் ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், கையடக்கத் தொலைபேசி மற்றும் டிஜிட்டல் தராசு ஒன்றும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.
மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், துபாயில் உள்ள ரந்தில் என்பவரால் கைது செய்யப்பட்ட 32 வயதுடைய தாய்லாந்து நாட்டவர் ஊடாக இந்த போதைப்பொருள் தொகை நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கடவத்தை பிரதேசத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த வெளிநாட்டவரால் கொண்டுவரப்பட்ட ஹெராயின் தொகை கிரிபத்கொடவில் இருந்த சந்தேகநபரிடம் வழங்கப்பட்டுள்ளதுடன், அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ரந்திலின் அறிவுறுத்தலின் பேரில் பல்வேறு இடங்களில் போதைப்பொருட்களை வைத்து இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 3ஆம் திகதி இரவு உள்ளூர் கடத்தல்காரர் கைது செய்யப்பட்டவுடன், துபாயில் உள்ள ரந்தில் தொலைபேசி மூலம் தாய்லாந்து நாட்டவரைத் தொடர்புகொண்டு உடனடியாக அந்த இடத்திலிருந்து தப்பிச் செல்லுமாறு அறிவித்துள்ளார். அதன்படி, வெளிநாட்டவர் கடவத்தை பிரதேசத்திலிருந்து புறப்பட்டு சீதுவ பிரதேசத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் மறைந்திருந்தபோது பொலிஸ் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.