ராஜகிரிய, கலப்பலுவாவ பிரதேசத்தில் முச்சக்கர வண்டி சாரதியைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த மொடல் அழகி பியுமி ஹன்சமாலியின் மகன் உள்ளிட்ட ஏழு சந்தேகநபர்களைப் பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் நுவன் கௌசல்ய நேற்று (20) உத்தரவிட்டார்.
ஒரு சந்தேகநபருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளை விதித்த நீதவான், சிறுவர் சந்தேகநபர்களுக்காக அவர்களது பெற்றோர் பிணையாளர்களாக முன்னிலையாக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள், அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதன்போது, சாட்சியாளர் அனைத்து சந்தேகநபர்களையும் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் என உறுதிப்படுத்தியுள்ளார்.
பொலிஸ் விசாரணைகளின்படி, சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர், பியுமி ஹன்சமாலியின் மகனின் நண்பர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது ராஜகிரிய பிரதேசத்தில் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வந்த மொடல் அழகியின் மகன் உள்ளிட்ட குழுவினர் முச்சக்கர வண்டி சாரதியைத் தாக்கியது தொடர்பில் வெலிக்கடைப் பொலிஸார் இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
அனைத்து விடயங்களையும் கருத்திற்கொண்ட நீதவான் சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்கியதுடன், அடுத்த மாதம் ஜூன் 8ஆம் திகதி நீதிமன்றத்தில் மேலதிக விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், பிணை கிடைத்த பின்னர் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறிய பியுமி ஹன்சமாலி, ஊடகங்களுக்கு எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் தனது ரேஞ்ச் ரோவர் வாகனத்தில் உடனடியாகப் புறப்பட்டுச் சென்றார். பிணை பெற்ற மற்ற சந்தேகநபர்கள் தனித்தனியாக அந்த இடத்தை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்களில் ஒருவர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஊடகவியலாளர்களுடன் சூடான வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை எடுக்க வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார். இந்த நிலைமையைச் சமாதானப்படுத்த பொலிஸாரும் தலையிட வேண்டியிருந்தது.