அக்குரேகொட பிரதேசத்தில் ஒரு வழக்கறிஞரையும் அவரது மனைவியையும் சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பாக ஒரு துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில், இந்த இரட்டைக் கொலைக்கு முன்னர் துப்பாக்கிதாரியை பன்னிப்பிட்டியிலுள்ள ஒரு தங்குமிடத்திற்கு அழைத்து வந்ததாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் ஒருவர் தாய்லாந்துக்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு வாகனங்களையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (21) பிற்பகல் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
தாய்லாந்துக்கு தப்பிச் சென்றுள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர் கஹதூவ பிரதேசத்தைச் சேர்ந்தவர். இந்த கொலையை வழிநடத்தியதாக சந்தேகிக்கப்படும் 'கரந்தெனிய சுத்தா' என்ற குற்றவாளியின் நெருங்கிய சீடர் அவர் என தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிதாரிகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பிரியஸ் ரக கார் ஒன்று எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஹதூவ பிரதேசத்திலுள்ள ஒரு வீட்டில் இருந்து இன்று பிற்பகல் மேல் மாகாண தென் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டிலிருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்வதற்காக வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்ட காரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு கடந்த 13ஆம் திகதி இடம்பெற்றுள்ளதுடன், அதற்கு முந்தைய சில நாட்களில், அதாவது 10ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையான காலப்பகுதியில் துப்பாக்கிதாரிகளை கடவத்தைக்கும் கொட்டாவவிற்கும் இடையில் கொண்டு செல்வதற்காக கைது செய்யப்பட்ட பிரியஸ் கார் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.