தம்புள்ள - ஹபரண பிரதான வீதியில் திகம்பத்த மற்றும் அப்பகுதியில் கடந்த 9ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிள் மற்றும் வேன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் உயிரிழந்ததுடன், வேன் சாரதி காயமடைந்துள்ளதாக சீகிரியா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் திகம்பத்த பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் பணிபுரியும் இரு ஊழியர்கள் எனவும், தம்புள்ள மற்றும் தனமல்வில பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். வேன் தம்புள்ளவில் இருந்து ஹபரண நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ஹபரணவில் இருந்து தம்புள்ள நோக்கி மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
எவ்வாறாயினும், விபத்து நடந்த விதம் குறித்து உறுதியாக கண்டறிய முடியவில்லை என்றும், விபத்து நடந்தவுடன் உயிரிழந்த இரு இளைஞர்களும் வீதியில் இருந்து வெகுதூரம் தூக்கி வீசப்பட்டு விழுந்திருந்ததும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்கள் கிம்ஹான ஜயதிலக்க மற்றும் தவிந்து சேத்திய ரத்நாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் சுற்றுலா ஹோட்டலில் பணிபுரிந்து வந்த நிலையில், நோயாளி ஒருவரைப் பார்க்க தம்புள்ள வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் சீகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.