பெட்டகொட்ட, கெசல்வத்தை, சாஞ்சிஆரச்சிவத்தை பிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் வங்கிக்குச் சொந்தமான, பயன்படுத்தப்படாத கட்டிடத்தின் கீழ் தளத்தில் குப்பி விளக்கை ஏற்றி போதைப்பொருள் உட்கொண்டிருந்த ஒரு சட்டத்தரணியை கெசல்வத்தை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் நேற்று முன்தினம் (21) மாலை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சட்டத்தரணியின் வசம் 130 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் இருந்துள்ளதுடன், போதைப்பொருள் உட்கொள்ள பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குப்பி விளக்கும் வழக்குப்பொருளாக பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது. பிரதேசத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒரு நபர் இந்த பாழடைந்த கட்டிடத்தில் போதைப்பொருள் உட்கொண்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் பொலிஸ் குழுவினர் சுற்றிவளைத்து இவரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இவர் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றத்திலும் சட்டத்தரணி தொழிலில் ஈடுபட்டு வருபவர் என்ற தகவல் தெரியவந்துள்ளதாக அந்த உயர் பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார். ஐம்பத்தொன்பது வயதான இந்த சட்டத்தரணி கிருலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்தவர். கைது செய்யப்பட்ட இந்த சட்டத்தரணி நீண்டகாலமாக ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பவர் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர். அவருக்கு ஐஸ் போதைப்பொருள் எவ்வாறு கிடைக்கிறது என்பது குறித்த தகவல்களை வெளிக்கொணர்வதற்காக கெசல்வத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.