அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவர்களுக்குச் சொந்தமான 'மார்-ஏ-லாகோ' (Mar-a-Lago) விடுதி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞர் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:30 மணியளவில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ஜனாதிபதியின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான இரகசிய சேவை (Secret Service) குறிப்பிட்டதாவது, இந்த நபர் துப்பாக்கி மற்றும் எரிபொருள் அடங்கிய ஒரு கேனுடன் பலத்த பாதுகாப்பு உள்ள பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றுள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் வட கரோலினா மாநிலத்தில் வசித்து வந்த 20 வயது இளைஞர் ஆவார். அவரது அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை, மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சம்பவம் நடந்த நேரத்தில் ஜனாதிபதி டிரம்ப் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் தங்கியிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் பொதுவாக வார இறுதி நாட்களை இந்த விடுதி வளாகத்தில் கழிப்பது ஒரு சிறப்பு அம்சமாகும். இதற்கிடையில், சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும் சிவப்பு நிற எரிபொருள் கேனின் புகைப்படத்தையும் அதிகாரிகள் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.
இரகசிய சேவை அதிகாரிகள் நடத்திய ஊடக சந்திப்பில் தெரியவந்ததாவது, விடுதி வளாகத்தின் வடக்கு வாயிலில் இருந்து ஒரு கார் வெளியே வந்தபோது, அதற்குப் பின்னால் மறைந்து இவர் உள்ளே நுழைய முயன்றுள்ளார். அப்போது செயல்பட்ட இரண்டு பாதுகாப்பு முகவர்கள் அவரை நிறுத்தி, கையில் உள்ள ஆயுதத்தை கீழே போடுமாறு உத்தரவிட்டுள்ளனர். இளைஞர் எரிபொருள் கொள்கலனை கீழே வைத்தாலும், துப்பாக்கியை சுடுவதற்கு ஏற்றவாறு உயர்த்தியதால் பாதுகாப்புப் படையினர் அவரை சுட்டுள்ளனர். விசாரணைகளில், இவர் காணாமல் போனதாக இவரது குடும்ப உறுப்பினர்கள் சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்திருந்ததும், வட கரோலினாவில் இருந்து தெற்கு நோக்கி வரும் வழியில் இந்த துப்பாக்கியை வாங்கியுள்ளதும் தெரியவந்துள்ளது. அவரது காரில் இருந்து துப்பாக்கி வைக்கப்பட்டிருந்த பெட்டியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் ஜனாதிபதி டிரம்ப்பின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் பதிவாகியுள்ளன. 2024 ஜூலை 13 அன்று, அதாவது ஜனாதிபதித் தேர்தலுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போதும் அவர் படுகொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது சுமார் 400 அடி தூரத்தில் இருந்து 20 வயது இளைஞர் ஒருவரால் சுடப்பட்ட குண்டு அவரது காதுக்கு அருகில் சென்றது, உடனடியாக செயல்பட்ட ஸ்னைப்பர் படையினர் அந்த தாக்குதல்தாரியையும் கொன்றனர். அந்த நேரத்தில் பாதுகாப்புப் படையினர் அவரை மறைத்துக்கொண்டிருந்தபோது அவர் கையை உயர்த்தியிருந்த புகைப்படம் உலகளவில் பெரும் பேசுபொருளானது.
அமெரிக்க ஜனாதிபதிக்குச் சொந்தமான இந்த 'மார்-ஏ-லாகோ' விடுதி வளாகத்திற்குள் நுழைய சிறப்பு உறுப்பினர் அட்டை பெற வேண்டும், இது மிகவும் கடுமையான நிபந்தனைகளின் கீழ் வழங்கப்படுகிறது. அதன் வாழ்நாள் உறுப்பினர் அட்டைக்கு இந்திய ரூபாய் 8.5 கோடிக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பணம் செலுத்தும் திறன் இருந்தாலும், வங்கிக் கணக்கு விவரங்கள், சமூக அந்தஸ்து மற்றும் குடும்பப் பின்னணி குறித்து தீவிர ஆய்வு செய்த பின்னரே உறுப்பினர் அட்டை வழங்கப்படுவது இதன் தனிச்சிறப்பு. உலகெங்கிலும் உள்ள ஏராளமான பணக்காரர்கள் இதற்கு விண்ணப்பித்தாலும், மிகச் சிலருக்கே உறுப்பினர் அட்டை கிடைப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.