
பங்களாதேஷில் பத்மா ஆற்றில் பயணிகள் பேருந்து கவிழ்ந்ததில் சிறுவர்கள் உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர். டாக்கா தலைநகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் (62 மைல்) தொலைவில் உள்ள ராஜ்பாரி மாவட்டத்தின் தௌலத்டியா பகுதியில் கடந்த புதன்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
40 பயணிகளுடன் சென்ற இந்த பேருந்து படகில் ஏறும் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த சோகம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை உறுதிப்படுத்தினர்.சுமார் 30 அடி (9 மீட்டர்) ஆழமான நீரில் மூழ்கிய பேருந்தில் சிக்கியிருந்த 22 சடலங்களை மீட்புக் குழுவினர் மீட்டனர். அவர்களில் ஐந்து சிறுவர்கள், பதினொரு பெண்கள் மற்றும் ஆறு ஆண்கள் அடங்குவதாக தீயணைப்பு சேவை அதிகாரி தல்ஹா பின் காசிம் தெரிவித்தார். மேலும், மீட்கப்பட்ட பின்னர் மேலும் இரண்டு பெண்கள் உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். பேருந்து படகில் ஏறுவதற்காக காத்திருந்தபோது திடீரென ஆற்றில் கவிழ்ந்ததாகவும், அதிலிருந்து வெளியேற முடிந்த சில பயணிகளின் குடும்ப உறுப்பினர்கள் வாகனத்திற்குள் சிக்கி உயிரிழந்ததாகவும் சம்பவத்தை நேரில் கண்ட 35 வயதுடைய நூர் ஜஹான் பேகம் தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்த தருணத்தின் வீடியோ காட்சிகள் இணையம் முழுவதும் பரவி வருகின்றன. பேருந்து ஆற்றில் கவிழ்ந்த விதமும், அதிர்ச்சியடைந்த மக்கள் கூச்சலிட்டு பயணிகளைக் காப்பாற்ற நீண்ட சால்வைகளை ஆற்றில் வீசிய விதமும் அதில் தெளிவாகத் தெரிகிறது. இராணுவம், பொலிஸ், கடலோரக் காவல்படை மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் உதவியுடன் நான்கு தீயணைப்புப் பிரிவுகளும் பத்து மூழ்காளர்களும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும், மேலும் சில பயணிகள் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
பங்களாதேஷில் பலவீனமான சாலை அமைப்புகள், முறையான பராமரிப்பு இல்லாத வாகனங்கள் மற்றும் கவனக்குறைவான ஓட்டுநர் காரணமாக இத்தகைய ஆபத்தான விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. அந்த நாட்டின் சாலை பாதுகாப்பு அறக்கட்டளை சுட்டிக்காட்டுவது போல, சமீபத்தில் முடிவடைந்த ஈத் விடுமுறை காலத்தில் மட்டும் சாலை விபத்துகள் காரணமாக 200க்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் ஒரு விபத்தில் ரயில் பேருந்துடன் மோதியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். உலக சுகாதார அமைப்பின் 2023 அறிக்கைகளின்படி, அந்த நாட்டில் ஆண்டுதோறும் சாலை விபத்துகள் காரணமாக சுமார் 5,000 மரணங்கள் அதிகாரப்பூர்வமாகப் பதிவாகியிருந்தாலும், உண்மையான மரண எண்ணிக்கை 31,500ஐத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.