ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பல அரபு நாடுகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஈரானிய தாக்குதல்கள் தொடர்பாக, ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி ஷேக் மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடையே திங்கட்கிழமை தொலைபேசி உரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் பிராந்திய பாதுகாப்பு மற்றும் இராணுவ முன்னேற்றங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், மோதல் மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு இரு தலைவர்களும் கோரினர்.மேலும், நெருக்கடிகளைத் தீர்ப்பதில் இராஜதந்திரத்திற்கும் உரையாடலுக்கும் முன்னுரிமை அளிப்பதன் முக்கியத்துவத்தை அவர்கள் இங்கு வலியுறுத்தினர்.
இந்தத் தாக்குதல்களை கடுமையாகக் கண்டித்து, சியரா லியோன் ஜனாதிபதி ஜூலியஸ் மாடா பயோ, சாட் குடியரசின் ஜனாதிபதி மஹமத் இட்ரிஸ் டெபி இட்னோ, கொங்கோ ஜனநாயகக் குடியரசின் ஜனாதிபதி ஃபெலிக்ஸ் ஷிசெகெடி மற்றும் செனகல் ஜனாதிபதி பஸிரோ டியோமாயே ஃபாயே ஆகிய தலைவர்களும் ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதிக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளனர். இந்த நடவடிக்கைகள் சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளை மீறுவதாகும் என்று சியரா லியோன் ஜனாதிபதி தெரிவித்தார். கூடுதலாக, வடக்கு மாசிடோனிய பிரதமர் கிறிஸ்டியன் மிக்கோஸ்கி மற்றும் கென்ய ஜனாதிபதி டாக்டர் வில்லியம் சமோய் ரூட்டோவும் ஈரானிய தாக்குதல்களைக் கண்டித்ததுடன், ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தங்கள் ஆதரவையும் அனுதாபத்தையும் தெரிவித்தனர்.
இதற்கிடையில், ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஜோர்தான், குவைத் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டு, ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை கடுமையாகக் கண்டித்துள்ளன. இந்தத் தாக்குதல்கள் ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், ஜோர்தான், குவைத், ஓமான், கட்டார், சவுதி அரேபியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் இறையாண்மைப் பகுதிகளை இலக்காகக் கொண்டு பொதுமக்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரானின் இந்த நடவடிக்கை பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாகவும், இறையாண்மையை மீறும் ஆபத்தான சூழ்நிலையாகவும் இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC) அமைச்சர்கள் குழு ஞாயிற்றுக்கிழமை காணொளி தொழில்நுட்பம் மூலம் தனது 50வது விசேட கூட்டத்தை நடத்தியது. ஈரானிய தாக்குதல்களால் சிவில் வசதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு ஏற்பட்ட பெரும் சேதங்கள் குறித்து அங்கு ஆய்வு செய்யப்பட்டதுடன், இந்த நிலைமை குடிமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும், மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக கவுன்சில் தெரிவித்தது. உலகத் தலைவர்கள் தற்போது இந்த இராணுவ மோதல்களை உடனடியாக நிறுத்துமாறு கூட்டாகக் கோருகின்றனர். (கல்ஃப் டுடே தகவலின்படி)