
ஈரானுக்கு எதிராக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளால் தொடங்கப்பட்ட தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் மேலும் விரிவடைந்து வரும் நிலையில், விமானப் போக்குவரத்துத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. முடிவில்லாமல் நீண்டு செல்லும் இந்தக் மோதல் காரணமாக தொடர்ந்து மூன்றாவது நாளாக விமானப் பயணங்கள் தடைபட்டுள்ளன. இதன் மூலம் ஏற்படும் வருவாய் இழப்புகளுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டு பாதுகாப்பை வழங்க கடமைப்பட்டிருக்கவில்லை என்று காப்பீட்டுத் துறை வல்லுநர்களும் ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிலைமை உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான விமானப் பயணங்களைத் தடுத்து, முக்கிய மத்திய கிழக்கு விமான மையங்களை மூட வழிவகுத்துள்ளது. அத்துடன், எரிபொருள் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. அதே நேரத்தில், ஆசியாவிலிருந்து நியூயார்க் வரையிலான பயணத் துறை தொடர்பான நிறுவனங்களின் பங்கு விலைகள் சரிந்துள்ளன. இதன் மூலம் அந்த நிறுவனங்களின் சந்தை மதிப்பில் பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இத்தகைய போர் அபாயங்கள் பெரும்பாலும் வணிகச் சொத்து காப்பீட்டுக் கொள்கைகளால் ஈடுசெய்யப்படுவதில்லை என்று ஜெஃப்ரீஸ் (Jefferies) நிறுவனத்தின் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கடல்சார் மற்றும் விமானக் காப்பீடுகளைப் போலன்றி, வணிகச் சொத்துக்களுக்கு தனி போர் காப்பீட்டைப் பெறுவதும் எளிதான காரியம் அல்ல. எனவே, துபாயில் உள்ள பாம் ஜுமேரா (Palm Jumeirah) போன்ற தனித்துவமான இடங்களுக்கு ஏற்படக்கூடிய சேதங்கள் கூட காப்பீட்டால் ஈடுசெய்யப்படாமல் போகும் அபாயம் உள்ளது. விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்கள் மற்றும் பொறுப்புகளுக்கான போர் காப்பீட்டைக் கொண்டிருந்தாலும், விமானப் பயணங்கள் தடைபடுவதால் ஏற்படும் வருவாய் இழப்புகள் சாதாரண வணிகக் காப்பீட்டுக் கொள்கைகளின் கீழ் வருவதால், போர்ச் சூழ்நிலைகளின் கீழ் அவற்றுக்கு இழப்பீடு கிடைக்காது என்று காப்பீட்டுத் துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. இருப்பினும், விமானக் காப்பீட்டு நிறுவனங்கள் இத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொள்ளப் பழக்கப்பட்டிருப்பதால், இதுவரை காப்பீட்டுப் பாதுகாப்பை ரத்து செய்வதற்கான அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.
மோர்னிங்ஸ்டார் டிபிஆர்எஸ் (Morningstar DBRS) தரவரிசை நிறுவனம், இந்த மோதல் நிலைமை கடல்சார், விமானம், சொத்து, சுற்றுலா மற்றும் விநியோகச் சங்கிலி காப்பீட்டுத் துறைகளுக்கு குறிப்பிடத்தக்க சவால்களை உருவாக்கியுள்ளதாக சுட்டிக்காட்டுகிறது. ஏவுகணைத் தாக்குதல்கள் அல்லது வான் பாதுகாப்பு அமைப்புகளால் விமானங்களுக்கு ஏற்படக்கூடிய பெரிய சேதங்கள் மற்றும் இழப்பீட்டுக் கோரிக்கைகள் குறித்து காப்பீட்டாளர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். வளைகுடாப் பகுதியில் மோதல்கள் மேலும் விரிவடைந்தால், பயங்கரவாதம் மற்றும் அரசியல் வன்முறை தொடர்பான காப்பீட்டுச் சந்தையில் விலைகள் உயரவும், அதன் கொள்ளளவு குறையவும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே, மத்திய கிழக்கு வளைகுடாப் பகுதி வழியாக சரக்குகளை அனுப்புவதற்கான காப்பீட்டுச் செலவு கடந்த 48 மணி நேரத்தில் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பை வழங்குவதிலிருந்து பல காப்பீட்டாளர்கள் விலகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (ராய்ட்டர்ஸ் செய்தி அடிப்படையில்)