கட்டான, தாகொன்ன பிரதேசத்தில் இருமாடி வீட்டில் வசித்து வந்த 91 வயது மூதாட்டியின் வாயை துணியால் கட்டி, அவர் அணிந்திருந்த தங்கக் காதணிகள் உட்பட நகைகளை கொள்ளையடித்து 45,000 ரூபாய்க்கு அடகு வைத்ததாகக் கூறப்படும் தம்பதியினர் கட்டான பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அந்தப் பணத்தில் போதைப்பொருட்களை வாங்கிப் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளதுடன், கடந்த 26ஆம் திகதி நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அருகில் வைத்து சந்தேகநபர்களை பொலிஸ் உத்தியோகத்தர்கள் சட்டத்தின் பிடியில் சிக்க வைத்துள்ளனர்.
இந்தக் குற்றத்தைச் செய்த சந்தேகநபர், சம்பந்தப்பட்ட மூதாட்டி வசிக்கும் வீட்டிற்கு வந்து தோட்டத்தில் தேங்காய் பறிக்க வேண்டுமா என்று கேட்டுள்ளார். அவ்வாறு பறிக்கும் தேங்காய்களைச் சேகரிக்க தனது மனைவியையும் அழைத்து வந்ததாக அவர் கூறியுள்ளார். பின்னர், தேங்காய் பறிக்க வீட்டுப் பெண்ணின் அனுமதி கிடைத்ததும், அவர் தோட்டத்தின் கீழ் பகுதிக்குச் சென்றபோது, இந்தத் தம்பதியினர் சேர்ந்து அவரைப் பிடித்து, சத்தம் போட முடியாதபடி வாயை துணியால் கட்டி, தரையில் தள்ளிவிட்டனர். இந்த எதிர்பாராத சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் உடனடியாக மயக்கமடைந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், மயக்கமடைந்து தரையில் கிடந்த பெண்ணின் தங்க நகைகளை கழற்றிவிட்டு, இந்தத் தம்பதியினர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதற்கிடையில், வீட்டின் மேல் மாடியில் இருந்த பேத்தி ஒருவர், தனது பாட்டி வீட்டின் கீழ் தளத்தில் காணப்படாததால், அது குறித்து விசாரித்துள்ளார். அப்போது, தோட்டத்தின் கீழ் பகுதியில் மயக்கமடைந்து கிடந்த பாட்டியைப் பார்த்த அவர், அயலவர்களின் உதவியுடன் உடனடியாக அவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட பெண் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கொள்ளையிடப்பட்ட நகைகளை நாற்பத்தைந்தாயிரம் ரூபாய்க்கு அடகு வைத்து போதைப்பொருட்களை வாங்கிப் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. புத்தளம், மதுரங்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த இவர்களில் கணவன் 27 வயதுடையவர், மனைவி 25 வயதுடையவர். இவர்கள் இருவரும் பல வருடங்களாக போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என்பதும் பொலிஸ் விசாரணைகளில் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கட்டான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் வசந்த சுதசிங்க அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அயோஷ் பெரேரா, உப பொலிஸ் பரிசோதகர் சேனாரத்ன, பொலிஸ் சார்ஜன்ட் துலிப் (38852), அத்துடன் பொலிஸ் கான்ஸ்டபிள்களான மென்டிஸ் (82073), விக்ரமசிங்க (84115) மற்றும் நிஷான் (101536) ஆகியோர் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.