கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குஷ் மற்றும் ஹாஷ் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இருபத்தி இரண்டு பிக்குகளின் துறவறத்தை ரத்து செய்து, அவர்களை துறவறத்திலிருந்து நீக்க திரினிகாய மகா சங்கரத்னம் தீர்மானித்துள்ளது. இந்த நடவடிக்கை தொடர்பாக பௌத்த அலுவல்கள் ஆணையாளருக்கு அறிவிக்க திரினிகாயம் செயல்படும் என்று அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் வெளிப்படுத்தினார்.
கடந்த இருபத்தெட்டாம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது மகா சங்கரத்னம் இது குறித்து தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.சம்பந்தப்பட்ட பிக்குகள் தொடர்பாக நடைபெறும் நீதிமன்ற விசாரணையில் அவர்கள் நிரபராதிகள் என உறுதி செய்யப்பட்டால் மட்டுமே மீண்டும் துறவற வாழ்க்கையில் சேர்த்துக்கொள்வது குறித்து பரிசீலிக்க முடியும் என்று தலைமைக் குருமார்கள் இங்கு சுட்டிக்காட்டினர். திரினிகாய மகா சங்கரத்னத்தின் அங்கீகாரத்தின்படி எதிர்வரும் ஒரு நாளில் இந்த துறவற நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தற்போதைய சமூகத்தில் நிலவும் பல்வேறு போக்குகளுக்கு மத்தியில் சங்க சமூகத்தின் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது பிக்குகளால் மட்டும் தனியாக செய்ய முடியாது என்றும், அதற்கு அரசாங்கத்தின் ஆதரவு அத்தியாவசியம் என்றும் மகா சங்கரத்னம் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக திரினிகாய தலைமைக் குருமார்கள் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பை முழு சங்க சமூகத்தின் பொதுவான குரலாகக் கருதி செயல்படுமாறு மகா சங்கரத்னம் அரசாங்கத்திடம் கோரியது. இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி குறிப்பிடுகையில், போதைப்பொருள் அச்சுறுத்தல் தற்போது தேசிய அனர்த்தமாக மாறியுள்ளது என்றும், இந்த சம்பவம் மூலம் அதன் தீவிரத்தன்மை நன்கு உறுதிப்படுத்தப்படுகிறது என்றும் கூறினார். சாசன ஒழுக்கத்தைப் பாதுகாப்பதற்காக சங்கரத்னம் எடுக்கும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கத்தின் முழுமையான பங்களிப்பை வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.
இந்த முக்கிய கலந்துரையாடலுக்காக மல்வத்து பீடத்தின் அநுநாயக்கர் நியங்கொட விஜேசிறி தேரர், அஸ்கிரி பீடத்தின் அநுநாயக்கர் நாரம்பனாவ ஆனந்த தேரர் மற்றும் சோமாவதி ரஜமகா விகாராதிபதி கலாநிதி பஹமுனே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரர் உட்பட திரினிகாய மகா சங்கரத்னம் வருகை தந்திருந்தனர். மேலும், மஹவெல ஸ்ரீ ரத்தனபால, வெலகெதர ஸ்ரீ சுமநஜோதி, கலாநிதி மெதகம ஸ்ரீ தம்மாநந்த, கலாநிதி முருத்தெனிய ஸ்ரீ தம்மரத்தன, அத்தங்கனே ரத்தனபால, அத்தங்கனே சாசனரத்தன மற்றும் சுஹதகம அநுருத்த ஆகிய தேரர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இலங்கை அமரபுர மகா நிகாயவின் மகா லேகாதிக்காரி பலபிட்டியே சிறிசீவலி மற்றும் பிரதி லேகாதிக்காரி அஹங்கம மைத்ரீ மூர்த்தி ஆகிய தேரர்கள் உட்பட மகா சங்கரத்னம் நாட்டின் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒடுக்குவதன் அவசியத்தை இங்கு மேலும் விளக்கினர்.