
இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் நேற்று (16) கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 400 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய போதைப்பொருள் தொகையை கடத்திச் சென்ற பலநாள் மீன்பிடி படகு ஒன்றை தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட இந்த போதைப்பொருள் தொகையை பார்வையிடுவதற்காக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவும் கலந்துகொண்டார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில், அந்தப் படகில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் ஹெரோயின் என உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தப் படகில் மிகவும் சூட்சுமமாக ஆறு பைகளில் பொதி செய்யப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்ட இந்த ஹெரோயின் தொகையின் மொத்த எடை 150 கிலோகிராமிற்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருள் தொகையுடன் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட பலநாள் மீன்பிடி படகில் பயணித்த நான்கு சந்தேகநபர்கள் கரைக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், அவர்களை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக மேலதிக சட்ட நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.