கொழும்பு, புறக்கோட்டைப் பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபலமான ஆயத்த ஆடை விற்பனை நிலையத்திலிருந்து சுமார் அறுபத்திரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான பணமும் ஆடைத் தொகுதியும் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த விற்பனை நிலையத்தின் முகாமையாளர் உட்பட நான்கு ஊழியர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளவத்தை, ருத்ரா மாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய வர்த்தகர் ஒருவரால் புறக்கோட்டைப் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, புறக்கோட்டை ஹெட்டிவீதி கடல் வீதியில் அமைந்துள்ள தனது காட்சியறையிலிருந்து இந்த மாதத்தின் முதலாம் திகதிக்கும் பன்னிரண்டாம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 32 இலட்சம் ரூபாய் பணமும் விற்பனைக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த சுமார் 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆயத்த ஆடைத் தொகுதியும் இவ்வாறு காணாமல் போயுள்ளன.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரான விற்பனை நிலைய முகாமையாளரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் பின்னர், திருடப்பட்ட 32 இலட்சம் ரூபாய் பணம் மட்டக்குளி புனித மரியாள் வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் புலனாய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏனைய மூன்று சந்தேகநபர்களும் அதே விற்பனை நிலையத்தில் பணிபுரியும் விற்பனை உதவியாளர்கள் ஆவர். அவர்கள் 17 முதல் 42 வயதுக்குட்பட்ட நோட்டன்பிரிட்ஜ், ராகலை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த பாரிய திருட்டுச் சம்பவத்திற்காக அந்த நிறுவனத்தின் மேலும் சில ஊழியர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதால், அவர்களும் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புறக்கோட்டைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சமந்த த சில்வா அவர்களின் வழிகாட்டலின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.கே. அழகக்கோன் உட்பட உத்தியோகத்தர்கள் குழுவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
