மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலை இருந்தபோதிலும், இலங்கையில் எந்த எரிபொருள் பற்றாக்குறையும் ஏற்பட அனுமதிக்கப்படாது என்றும், எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக உறுதிப்படுத்த சீனா உறுதியளிப்பதாகவும் இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஜென்ஹோங் தெரிவித்தார். உலகளவில் ஏற்பட்டுள்ள இத்தகைய நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியிலும், இலங்கைக்கு வழங்கப்படும் ஆதரவு தொடர்ச்சியாகப் பேணப்படும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
கண்டி ஸ்ரீ சந்திரானந்த பௌத்த கல்லூரியில் குறைந்த வருமானம் கொண்ட 350 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே தூதுவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய மத்திய கிழக்கு யுத்த சூழ்நிலை காரணமாக உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் பல்வேறு விநியோகத் தடைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அப்படியிருந்தும், இலங்கையின் எரிபொருள் விநியோகத்தை நிலையாகப் பேண முடியும் என்று தூதுவர் இங்கு சுட்டிக்காட்டினார். தேவைப்படும் எந்த நேரத்திலும் இலங்கைக்கு உதவ சீனா தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எரிபொருள் விநியோகத்தில் ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால், எரிபொருள் விநியோகம் தொடர்ச்சியாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக சீன எரிசக்தி நிறுவனமான 'சைனோபெக்' (Sinopec) நிறுவனம் மூலம் தேவையான ஒத்துழைப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்திய தூதுவர், இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்திச் செயல்முறைக்கு சீனா தொடர்ச்சியாக தனது ஆதரவை வழங்கும் என்பதை வலியுறுத்தினார்.