சிங்கள கலாசாரத்திற்கும், சிங்கள மரபுகளுக்கும் கடுமையான அவதூறு ஏற்படுத்தும் வகையில் புத்தாண்டு விழா ஏற்பாடு செய்தமை தொடர்பில் பிரபல அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்கவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 'ராஜகீய சிங்கள புத்தாண்டு விழா' என்ற பெயரில் நடைபெற்ற இந்த கொண்டாட்டம் தொடர்பில் ஜோதிட நிபுணர்கள் குழு மற்றும் சிங்கள பாதுகாப்பு கூட்டணி ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவொன்று கடந்த 24ஆம் திகதி இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளது.
இந்த முறைப்பாட்டை முன்வைப்பதற்காக ஜோதிட நிபுணர்கள் குழுவின் தேசிய அமைப்பாளர் ரவிசங்க சேனாநாயக்க மற்றும் சிங்கள பாதுகாப்பு கூட்டணியின் தலைவர் சூரிய சித்த ரத்நாயக்க ஆகியோர் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவொன்று இணைந்திருந்தது. இளம் பெண்களின் அக்குள் கீழ் வைக்கப்பட்ட பீர் போத்தல்களில் இருந்து இளைஞர்களுக்கு பீர் குடிக்கச் செய்தல் மற்றும் வயிற்றில் வைக்கப்பட்ட பன் சாப்பிடுமாறு செய்தல் போன்ற ஒழுக்கவிரோத விளையாட்டுகளை தேசிய விளையாட்டுகளாக சித்தரிப்பதன் மூலம் சிங்கள கலாசாரத்திற்கு பாரிய சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது என அவர்கள் தமது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறான அநாகரிகமான செயற்பாடுகளை தேசிய விளையாட்டுகளாக ஊக்குவிக்க முயற்சிக்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பிலும் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் குறித்த முறைப்பாடு மூலம் மேலும் கோரப்பட்டுள்ளது. இலங்கை யுனெஸ்கோ அமைப்புடன் செய்துகொண்டுள்ள சாசனங்களின்படி இது மிகவும் பாரதூரமான குற்றம் என ஜோதிட நிபுணர்கள் குழுவின் தேசிய அமைப்பாளர் ரவிசங்க சேனாநாயக்க வலியுறுத்தினார்.
சம்பந்தப்பட்ட அமைப்புகளால் முன்வைக்கப்பட்ட இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இது தொடர்பில் வினவியபோது குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
