இலங்கை இராணுவத்தின் இரண்டாவது மிக உயர்ந்த பதவியான தலைமை அதிகாரி பதவிக்கு, இலங்கை பீரங்கிப் படையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி சிரேஷ்ட அதிகாரியான மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை இராணுவத்தின் 69வது தலைமை அதிகாரியாக இந்த புதிய நியமனம் நேற்று (29) முதல் அமுலுக்கு வரும் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆயுதப் படைகளின் தளபதியான ஜனாதிபதியால் இந்த பதவி உயர்வு மற்றும் நியமனம் இராணுவத் தளபதியின் விசேட பரிந்துரையின் பேரில் வழங்கப்பட்டுள்ளது.இந்த பொறுப்புமிக்க பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர், மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன, இராணுவத்தின் செயல்பாட்டு மட்டத்திலும் பல முக்கிய துறைகளிலும் உயர் பதவிகளை வகித்து ஒரு சிறப்புப் பங்கை ஆற்றிய அனுபவம் வாய்ந்த திறமையான அதிகாரியாவார். இலங்கை பீரங்கிப் படையிலிருந்து உருவான ஒரு புகழ்பெற்ற இராணுவ வீரரான அவர், முப்பது ஆண்டுகளுக்கும் மேலான தனது இராணுவ சேவைக் காலத்தில் தாய்நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதில் பாராட்டத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார் என்று இராணுவத் தலைமையகம் சுட்டிக்காட்டுகிறது.
இராணுவ மரபுகள் மற்றும் சடங்குகளுக்கு இணங்க, அவர் அடுத்த சில நாட்களில் இராணுவத் தலைமையகத்தில் தனது புதிய பதவியின் கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்க உள்ளார்.