இலங்கை சினிமாவின் நடிகை ராணி எனப் புகழப்படும் மூத்த நடிகை மாலினி பொன்சேகா அவர்களுக்கு கௌரவம் செலுத்தும் விசேட நிகழ்வு நேற்று (30) களனி குருகுல வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. களனி குருகுல வித்தியாலயத்தின் புகழ்பெற்ற பழைய மாணவியும் ஆன அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பெருமைமிக்க நிகழ்வில், பாடசாலை வளாகத்தில் அவரது மார்பளவு சிலை திறக்கப்பட்டது.
இதற்கு இணையாக, கல்லூரியின் புதுப்பிக்கப்பட்ட பிரதான மண்டபம் "மாலினி பொன்சேகா நாடக மண்டபம்" என உத்தியோகபூர்வமாகப் பெயரிடப்பட்டது.இந்த விசேட கௌரவிப்பு விழா, குருகுல வித்தியாலயத்தின் தற்போதைய அதிபர் திரு. கே. பெர்னாண்டோ அவர்களின் முழுமையான வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் கீழ் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் மாலினி பொன்சேகா அவர்களின் குடும்ப உறுப்பினர்களான அவரது சகோதர சகோதரிகளான கல்யாணி பொன்சேகா, தமயந்தி பொன்சேகா மற்றும் நிமல் பொன்சேகா ஆகியோருடன் உறவினர்களும் கலந்துகொண்டனர். மேலும், குருகுல வித்தியாலயத்தின் பழைய மாணவரான சிறப்பு வைத்தியர் தீபால் அத்தநாயக்க, மூத்த திரைப்பட இயக்குனர் ஜயந்த சந்திரசிறி, மூத்த பாடகர் எட்வர்ட் ஜயக்கொடி உள்ளிட்ட பல கலைஞர்களும், பாடசாலையின் ஏராளமான பழைய மாணவர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.