மியான்மரின் ஜனநாயகத் தலைவி ஆங் சான் சூகி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு ஒரு விசேட இல்லத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய ஒளிபரப்பாளர் வியாழக்கிழமை அறிவித்தது.
சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளபடி, அவரது சிறைத்தண்டனை தற்போது சுமார் 17 ஆண்டுகள் வரை மேலும் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் அமைக்கப்பட்ட புதிய அரசாங்கம் அனைத்து கைதிகளின் தண்டனை காலத்தையும் ஆறில் ஒரு பங்காக குறைக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்ததை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
நோபல் சமாதானப் பரிசு பெற்றவரும் 80 வயதானவருமான சூகி, 2021 இல் நடந்த இராணுவப் புரட்சியின் மூலம் பதவியிலிருந்து அகற்றப்பட்டு, ஊழல் குற்றச்சாட்டுகள் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார். இருப்பினும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த சிவில் தலைவியை சிறையில் அடைத்தது அரசியல் நோக்கங்களுக்காகவே என்று அவரது ஆதரவாளர்களும் சர்வதேச பார்வையாளர்களும் கருதுகின்றனர். 2022 ஆம் ஆண்டின் இறுதியில் அவருக்கு 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும், பல சந்தர்ப்பங்களில் அந்த தண்டனை காலம் குறைக்கப்பட்டது. அதன்படி, ஏப்ரல் 17 அன்று அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ் அவரது தண்டனை சுமார் 20 ஆண்டுகள் வரை குறைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
முன்னாள் இராணுவத் தளபதி மின் ஆங் ஹ்லைங் தலைமையிலான மியான்மர் இராணுவ அரசாங்கம் வியாழக்கிழமை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக மீண்டும் அறிவித்தது. இதற்கு முன்னர் ஏப்ரல் 17 ஆம் திகதியும் பெரிய அளவில் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. இந்த சமீபத்திய பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ், 1,508 மியான்மர் நாட்டவர்கள் மற்றும் 11 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 1,519 கைதிகளை அரசாங்கம் விடுவிக்கும்.