ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்து கொழும்பு குற்றப் பிரிவினர் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இந்த மரணம் நிகழும் போது, அவர் பிரபல கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவுக்கு சொந்தமான கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்துள்ளார். அத்துடன், அருகிலுள்ள இரண்டு வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமரா (CCTV) அமைப்புகளின் காட்சிகள் தற்போது விசாரணையாளர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட பின்னர், காலஞ்சென்ற கபில சந்திரசேன குறித்த வீட்டிற்கு வந்த தருணம் முதல் அவரது சடலம் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்படும் தருணம் வரையிலான முழு காலப்பகுதியும் அந்த பாதுகாப்பு கமரா காட்சிகளில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், அரவிந்த டி சில்வாவின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. அமைப்பிற்கு சொந்தமான டி.வி.ஆர். (DVR) இயந்திரத்தையும் பொலிஸ் பொறுப்பில் எடுக்க விசாரணை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகள் மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனுடன், மரணம் நிகழ்ந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு தண்ணீர் போத்தல் மற்றும் காகிதத்தில் சுற்றப்பட்டிருந்த பெயர் குறிப்பிடப்படாத சில மருந்து வகைகளும் உட்பட பொருட்கள் மேலதிக விஞ்ஞானப் பரிசோதனைகளுக்காக அரச இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.