அனுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதி விகாரை வளாகத்தில் ஒரு பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய கையடக்கத் தொலைபேசியை அரச இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பித்து அறிக்கை கோருமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு அனுராதபுரம் பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட கான்ஸ்டபிளுக்கு ஏற்பட்ட தொல்லை குறித்து உடமலுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அவர் தொலைபேசியில் அளித்த புகாரின் குரல் பதிவை குரல் பரிசோதனைக்கு உட்படுத்துவதே இதன் நோக்கம்.இந்தச் சம்பவம் தொடர்பாக உடமலுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சந்திர சுமிந்த ஹேவா பத்தினிங்கே என்ற அதிகாரி மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேகநபரான உதவிப் பொலிஸ் பரிசோதகரை எதிர்வரும் ஜூலை மாதம் 07ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பிரதான நீதவான் மேலும் உத்தரவிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட தொல்லை 2023 ஆகஸ்ட் 01 அன்று நடந்திருந்தாலும், சந்தேகநபரான உதவிப் பொலிஸ் பரிசோதகர் நீண்ட காலத்திற்குப் பிறகு, அதாவது 2024 டிசம்பர் 02 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய ஒரு பாரதூரமான குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் பொலிஸ் அதிகாரியை பணி இடைநீக்கம் செய்வது சாதாரண பொலிஸ் நடைமுறையாகும். இருப்பினும், இந்த சந்தேகநபர் தொடர்பில் வட மத்திய மாகாண பொலிஸ் தலைவர்கள் செயற்பட்ட விதம் குறித்து பல்வேறு தரப்பு பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சம்பவத்திற்குப் பிறகு, இந்த அதிகாரி சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள அலையாபத்துவ பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டார், பின்னர் ஒரு மாதத்திற்குள் மீண்டும் அவர் முன்னர் இருந்த உடமலுவ பொலிஸ் நிலையத்திற்கே அழைக்கப்பட்டுள்ளார். குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரி தொடர்ந்து அதே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுவது குறித்து அதிகாரிகளிடையே கடும் அதிருப்தி நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், அத்தகைய எதிர்ப்பு குறித்து தனக்கு எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை என்று சம்பந்தப்பட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.