ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பொது வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தடுப்புக் காவலில் இருந்த காலத்தில் உணவு மற்றும் நீர் உட்கொள்வதை முழுமையாக மறுத்து உண்ணாவிரதம் இருந்ததால், கடந்த 7ஆம் திகதி இரவு 8.15 மணியளவில் அதிகாரிகள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சலே தொடர்ந்து உணவு உட்கொள்ள மறுப்பதால், மருத்துவர்கள் அவருக்கு சலைன் மூலம் சிகிச்சை அளித்து வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. உண்ணாவிரதத்தை கைவிட்டு உணவு உண்ணுமாறு அவரது மனைவி, குழந்தை மற்றும் வழக்கறிஞர்கள் எவ்வளவு கோரிக்கை விடுத்தாலும், அவர் அனைத்து கோரிக்கைகளையும் நிராகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று (08) மாலை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளது. அங்கு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவிடம் சம்பவம் தொடர்பான விசேட வாக்குமூலத்தையும் குறித்த அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.