
இலங்கை மத்திய வங்கியின் எந்தவொரு ஒழுங்குமுறைப்படுத்தல் அல்லது பதிவுமின்றி பொதுமக்களிடமிருந்து பண வைப்புக்களைப் பெறும் மோசடியான நிதி மற்றும் தோட்ட முதலீட்டுத் திட்டங்களை ஊக்குவிப்பதையும், அவற்றின் விளம்பரங்களை வெளியிடுவதையும் உடனடியாக நிறுத்துமாறு மத்திய வங்கி நாட்டின் அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. மத்திய வங்கி எவ்வளவுதான் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், சில முன்னணி ஊடக நிறுவனங்கள் இவ்வாறான ஒழுங்குமுறைப்படுத்தப்படாத மோசடி நிறுவனங்களின் விளம்பர நிகழ்ச்சிகளையும் நேர்காணல்களையும் ஒளிபரப்புவதன் மூலம் அப்பாவி மக்கள் பெருமளவில் தமது பணத்தை இழக்க நேரிடுகிறது என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இனிமேல் இவ்வாறான மோசடி நிறுவனங்களுக்கு தமது தளத்தை வழங்கும் ஊடக நிறுவனங்களும் சம்பந்தப்பட்ட நிதி மோசடியின் பங்காளிகளாகக் கருதப்பட்டு சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறிச் செயற்படும் ஊடக நிறுவனத் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படவுள்ளதுடன், அங்கு அதிகபட்சமாக ஐந்து மில்லியன் ரூபா அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டு தண்டனைகளும் விதிக்க சட்ட ஏற்பாடுகள் உள்ளன. அத்துடன், பாதிக்கப்பட்டவர்களின் இழந்த வைப்புக்களை நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் செலுத்துவதற்கு சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்கள் சட்டத்தால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்றும் வலியுறுத்தப்படுகிறது.
மத்திய வங்கி இந்த உடனடி நடவடிக்கையை எடுக்க முக்கிய காரணம், கடந்த ஜூன் மாதம் எட்டாம் திகதி அரசாங்கத்திற்குச் சொந்தமான சுயாதீன தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்ட ஒரு நேர்காணலாகும். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 'கசகல கிரீன் பிளான்டேஷன்' (Kasagala Green Plantation Pvt Ltd) என்ற நிறுவனத்தின் பணிப்பாளரான மல்வத்தகே ரஞ்சித் நந்தன பீரிஸ் என்பவர், தனது தோட்ட முதலீட்டுத் திட்டம் மத்திய வங்கியின் ஒழுங்குமுறைக்கு உட்பட்ட நிறுவனம் என பொய்யான அறிக்கையை வெளியிட்டிருந்தார். இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, சம்பந்தப்பட்ட நிறுவனம் 2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க பண வணிகச் சட்டத்தை மீறி சட்டவிரோதமாக பொது வைப்புக்களைப் பெற்றுள்ளதா என்பது குறித்து ஆராய மத்திய வங்கி ஏற்கனவே ஒரு விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து ஊடக நிறுவனத் தலைவர்களுக்கும் அறிவித்து மத்திய வங்கியின் ஆளுநர் ஒரு விசேட கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் பண வணிகச் சட்டத்தின் 49 மற்றும் 56(4) பிரிவுகளின் கீழ் ஊடக நிறுவனங்களுக்கு உள்ள சட்டரீதியான பொறுப்பு விளக்கப்பட்டுள்ளது. அதன்படி, எந்தவொரு நிறுவனத்தின் வைப்புக்களைப் பெறுதல் அல்லது முதலீடுகளை ஊக்குவித்தல் தொடர்பான விளம்பரத்தை வெளியிடுவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட நிறுவனம் இலங்கை மத்திய வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள ஒரு சட்டபூர்வமான நிறுவனமா என்பதை கட்டாயமாக சரிபார்த்து உறுதிப்படுத்துவது ஊடக நிறுவனங்களின் சட்டரீதியான பொறுப்பாகும் என்றும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.