மக்கள் வங்கியினால் தனது பராட்டே அதிகாரங்களின் பிரகாரம் அடகு வைக்கப்பட்ட சொத்துக்களை பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்ய எடுத்த தீர்மானத்தை சவால் செய்து தயா குழும லிமிடெட் (Daya Group Limited) மற்றும் தயா ஆடை ஏற்றுமதி (Daya Apparel Export (Pvt) Ltd) ஆகிய நிறுவனங்களால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அதனை நிராகரிக்க தீர்மானித்துள்ளது. மேலும், நிலுவையிலுள்ள கடனை அறவிடும் நடவடிக்கையை சட்டபூர்வமாக முன்னெடுத்துச் செல்ல மக்கள் வங்கிக்கு முழு உரிமை உண்டு என நீதிமன்றம் இங்கு தீர்ப்பளித்தது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ஆர். குருசிங்க மற்றும் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர ஆகியோரைக் கொண்ட நீதிபதிகள் குழாம் இந்தத் தீர்ப்பை அறிவித்ததுடன், மனுதாரர் நிறுவனங்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் வழக்குச் செலவுகளைச் செலுத்துமாறும் உத்தரவிட்டது.
அமெரிக்க டொலர் 1.42 மில்லியனுக்கும் அதிகமான நிலுவைக் கடனை அறவிடுவதற்காக அடகு வைக்கப்பட்ட சொத்துக்களை பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்ய மக்கள் வங்கியின் பணிப்பாளர் சபை நிறைவேற்றிய தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி மனுதாரர்கள் செர்டியோராரி, ப்ரோஹிபிஷன் மற்றும் மண்டாமுஸ் (Certiorari, Prohibition and Mandamus) ஆகிய ரிட் கட்டளைகளை வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரியிருந்தனர்.
2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல், கோவிட்-19 தொற்றுநோய் நிலைமை, நாட்டில் நிலவிய எரிபொருள் பற்றாக்குறை மற்றும் அரசியல் ஸ்திரமின்மை உள்ளிட்ட முன்னெப்போதும் இல்லாத பொருளாதார பின்னடைவு காரணமாக தாம் கடுமையான நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டதாகவும், இதனால் வங்கிக் கடன்களைத் தீர்க்கும் திறனில் பாதகமான தாக்கங்கள் ஏற்பட்டதாகவும் மனுதாரர் நிறுவனங்கள் சார்பில் வாதிடப்பட்டது.
மக்கள் வங்கி, மக்கள் வங்கிச் சட்டத்தின் கீழ் உள்ள பராட்டே அதிகாரங்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியுள்ளதாக மனுதாரர்கள் குற்றம் சாட்டினர். மேலும், அதிக வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்களைப் பின்பற்றி வங்கி கடனை நியாயமற்ற முறையில் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டனர். அத்துடன், சட்டபூர்வமான கட்டாய அறிவிப்புகள் தங்களுக்கு முறையாகக் கிடைக்காததால், இந்த ஏலச் செயல்முறை நடைமுறை ரீதியாக குறைபாடுடையது என்றும் நிறுவனங்கள் தரப்பு வாதிட்டது.
எவ்வாறாயினும், அந்த வாதங்கள் அனைத்தையும் மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்ததுடன், கடனை அறவிடும் நடவடிக்கையை சட்டபூர்வமாக முன்னெடுத்துச் செல்ல வங்கிக்கு உரிமை உண்டு என்பதை உறுதிப்படுத்தியது. கடனை மறுசீரமைக்க பல சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டு ஏலம் ஒத்திவைக்கப்பட்ட போதிலும், மனுதாரர்கள் தொடர்ந்து கடனை செலுத்தத் தவறியுள்ளதாகக் கூறி மக்கள் வங்கி இந்த மனுவை கடுமையாக எதிர்த்தது. மேலும், பராட்டே அதிகாரங்களை செயல்படுத்துவது தொடர்பான தீர்மானங்களை சவால் செய்ய கடன் பெற்றவர்களுக்கு தடை விதிக்கும் மக்கள் வங்கிச் சட்டத்தின் 29D பிரிவின் (Section 29D) கீழ் இந்த மனு சட்டபூர்வமாகப் பேணப்பட முடியாது என்பதையும் வங்கி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியது.
இங்கு தீர்ப்பை அறிவித்த நீதிபதி பிரேமச்சந்திர, சவால் செய்யப்பட்ட ஏலத் தீர்மானம் 2021 மார்ச் மாதத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், மனுதாரர்கள் இந்த ரிட் விண்ணப்பத்தை ஒரு வருடம் எட்டு மாதங்களுக்கும் மேலான தாமதத்திற்குப் பிறகு, அதாவது 2022 நவம்பர் மாதத்தில் தாக்கல் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். இந்த நீண்ட தாமதத்திற்கு திருப்திகரமான காரணங்களை மனுதாரர்கள் வழங்கத் தவறிவிட்டதாகவும், அவர்கள் தங்கள் உரிமைகள் குறித்து உரிய நேரத்தில் செயல்படாமல் தாமதித்துள்ளதாகவும் நீதிபதிகள் குழாம் முடிவு செய்தது. எனவே, 2021 மார்ச் 26 அன்று வங்கியால் நிறைவேற்றப்பட்ட உத்தியோகபூர்வ தீர்மானத்தின்படி, நிலுவைக் கடனை அறவிடுவதற்காக அடகு வைக்கப்பட்ட சொத்துக்களை ஏலம் விடும் நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல மக்கள் வங்கிக்கு முழு உரிமை உண்டு என்று நீதிமன்றம் வலியுறுத்தியது.