இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவினால் 2026 ஜூன் 25 அன்று மூன்று விசேட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 5000 இலட்சம் ரூபாவை (50 கோடி ரூபாவை) இலஞ்சமாக கோரி, பின்னர் அந்த தொகையை 2000 இலட்சம் ரூபாவாக (20 கோடி ரூபாவாக) குறைத்து, அதில் 1200 இலட்சம் ரூபாவை (12 கோடி ரூபாவாக) முற்பணமாக இலஞ்சமாக கோரிப் பெற்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான நதுன் சிந்தக விக்ரமரத்ன அல்லது "ஹரக் கட்டா" என்பவரின் உயிரைப் பாதுகாப்பதற்கும், அவரைக் கொலை செய்வதைத் தடுப்பதற்கும் இந்த இலஞ்சப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது. அத்துடன், குறித்த சந்தேகநபரின் தடுப்புக் காவல் உத்தரவுகளை நீக்கி, காலி பூஸ்ஸ அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையிலிருந்து வேறு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கும், விசாரணைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் இருந்து அவரை விடுவிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த பணம் கோரப்பட்டுள்ளது. இந்த சந்தேகநபரின் மனைவி மதுஷிகா மதுவந்தியிடம் 2023 ஆம் ஆண்டில் துபாய் இராச்சியத்தில் இந்த இலஞ்சப் பணம் கோரப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த பாரிய இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் முன்னாள் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான சட்டத்தரணி ரபின் நிர்மல ராஜபக்ஷ மற்றும் சமுர்த்தி மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளராக செயற்படும் சரித வசந்த குமார அபேசிங்க ஆகியோராவர். இவர்களுடன், சிவில் மற்றும் விமானப் போக்குவரத்து அதிகாரசபை மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (விமான சேவை ஸ்ரீலங்கா நிறுவனம்) நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளராக செயற்பட்ட வருஷஹன்னதிகே அருண ஸ்ரீ சதுரங்க என்பவரும் இலஞ்ச ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் ஊடகப் பிரிவு, இன்று கைது செய்யப்பட்ட இந்த மூன்று சந்தேகநபர்களும் விரைவில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.