
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை தினமும் சென்று பார்வையிட அவரது மனைவிக்கும் மகனுக்கும் அனுமதி வழங்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்துள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் உள்ள அவர், தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தக் கோரிக்கையை நிராகரித்த கோட்டை நீதவான் பசன் அமரசேன, சந்தேகநபர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் விதிகளின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதால், இவ்வாறான அனுமதியை வழங்க நீதிமன்றத்திற்கு சட்ட அதிகாரம் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவை தினமும் சந்திப்பதற்கு அனுமதி வழங்குமாறு அவரது மனைவியும், சட்டத்தரணி அசித் சிறிவர்தனவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடம் எழுத்துமூலம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். தனது கட்சிக்காரரின் நலன்புரி மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது தனது தொழில்முறை கடமை என்று சட்டத்தரணி வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையில், தன்னைத் தடுத்து வைத்திருப்பதற்கு எதிராகவும், தடுப்புக் காவல் உத்தரவை ரத்து செய்யக் கோரியும் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை மேலதிகமாக பரிசீலிக்கும் நடவடிக்கைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கிடையில், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மேலும் முறைப்படுத்தவும் வலுப்படுத்தவும் கோரியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்கக் கோரியும் நீர்கொழும்பு பிரதேசத்தில் அமைதியான ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கட்டுவப்பிட்டிய தேவாலயத்தின் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியதுடன், பின்னர் அவர்கள் கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக நடைபெற்று வரும் சத்தியாக்கிரக இடத்திற்கும் வந்தனர். அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் தற்போதைய அரசாங்கத்தால் எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பாராட்டி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.