அலதெனிய, யட்டிஹலகல பிரதேசத்தில் அமைந்துள்ள தனது சட்டபூர்வ மனைவிக்குச் சொந்தமான ஒரு வீட்டில், தன்னுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஒரு பெண்ணின் கழுத்தில் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்து, அவளிடமிருந்த தங்கச் சங்கிலியைக் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் சந்தேக நபரொருவரை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கண்டி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண் கடந்த 17ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது மகன் ரத்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், கடந்த 26ஆம் திகதி யட்டிஹலகல பிரதேசத்தில் உள்ள குறித்த வீட்டில் படுக்கைக்கு அடியில் அழுகிய நிலையில் இருந்த அவரது சடலத்தை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடிந்தது. அந்த வீட்டின் உரிமையாளரான சந்தேக நபரின் மனைவி தற்போது தனது கணவரைப் பிரிந்து மாணிக்கஹின்ன பிரதேசத்தில் வசித்து வருகிறார், அவர் தனது வீட்டைப் பார்க்க மற்றொரு பெண்ணுடன் வந்தபோது வீட்டிலிருந்து வீசிய கடுமையான துர்நாற்றம் காரணமாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த சடலத்தைக் கண்டு அது குறித்து 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு அறிவித்துள்ளார்.
வீட்டின் முன் கதவு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது, பின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, அதில் ஒரு கம்பி ஆணி அடிக்கப்பட்டிருந்ததை வீட்டின் உரிமையாளர் அவதானித்துள்ளார். அலதெனிய பொலிஸார் கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், மோப்ப நாய் பிரிவு மற்றும் கைரேகை பிரிவினரை வரவழைத்து அந்த இடத்தில் மேற்கொண்ட விரிவான விசாரணையின் போது ஒரு ஜோடி பெண்களின் காலணிகள், ஒரு கைப்பை மற்றும் சில தொலைபேசி எண்கள் எழுதப்பட்ட சில காகிதத் துண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டன, அந்த தகவல்கள் மூலம் இறந்த பெண்ணின் அடையாளத்தை உறுதிப்படுத்த புலனாய்வாளர்களுக்கு முடிந்தது.
மாத்தளை தலைமையகப் பொலிஸாரின் உதவியுடன் குறித்த சந்தேக நபரை மாத்தளை பிரதேசத்திலேயே கைது செய்ய பொலிஸாரால் முடிந்தது, அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அவர் கடந்த 17ஆம் திகதி இறந்த பெண்ணுடன் தான் இந்த வீட்டிற்கு வந்ததாகக் கூறியுள்ளார். அங்கு அவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு முற்றியதன் பின்னர் தான் அவளை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாகவும், அதன் பின்னர் அவளது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை எடுத்துச் சென்றதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
சந்தேக நபரால் கொள்ளையிடப்பட்ட தங்கச் சங்கிலி மாத்தளையில் உள்ள ஒரு அடகு நிலையத்தில் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது, கொலை செய்யப்பட்ட பெண் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கையடக்கத் தொலைபேசியும் குற்றம் நடந்த வீட்டிற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மனிதாபிமானமற்ற முறையில் கொலை செய்யப்பட்டவர் எல்வத்த, பிட்டகந்த தோட்டத்தில் வசித்து வந்த வேலுக்காளியம்மாள் என்ற அறுபது வயதுப் பெண் ஆவார்.
கண்டி தேசிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அதற்கான திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், சடலம் குடும்ப உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திரநாயக்க உட்பட உயர் பொலிஸ் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் அலதெனிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவொன்று இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.