கொழும்பு காலி முகத்துவார கடற்கரையில் வீட்டாருக்குத் தெரியாமல் குளிக்க வந்த ஆறு பாடசாலை மாணவர்களைக் கொண்ட குழுவொன்று அலையில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒரு மாணவர் காணாமல் போயுள்ளதாகவும் கோட்டைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் இருந்து மீட்கப்பட்ட ஏனைய நான்கு மாணவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் சிக்கியவர்கள் மாளிகாவத்தை மற்றும் பஞ்சிகாவத்தை பிரதேசங்களைச் சேர்ந்த 11, 12, 13 மற்றும் 15 வயதுடைய பாடசாலை மாணவர்களாவர். இவர்கள் தமது வீடுகளுக்குத் தெரிவிக்காமல் நேற்று (10) மாலை இவ்வாறு காலி முகத்துவார கடற்கரைக்கு வந்துள்ளனர்.
மாணவர்கள் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோது ஒருவர் பலத்த அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார். அவரைக் காப்பாற்ற மற்றவர்கள் கடுமையாக முயற்சித்துள்ளனர். அப்போது முழு குழுவும் ஆபத்தில் சிக்கியது. அந்த நேரத்தில் கடற்கரையில் இருந்த உயிர் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு, பெரும் முயற்சிக்குப் பிறகு ஐந்து குழந்தைகளைக் காப்பாற்றி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தையும், இதுவரை காணாமல் போயுள்ள குழந்தையும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். காணாமல் போன மாணவனைத் தேடுவதற்காக கோட்டைப் பொலிஸார் உள்ளிட்ட குழுக்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட போதிலும், இதுவரை அவரைப் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை.